ஆப்நகரம்

செமஸ்டர் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

மாணவர்களுக்கான செமெஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யபட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

Samayam Tamil 4 Sep 2020, 5:42 pm
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அரியர் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் இறுதி பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
Samayam Tamil உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்


இந்த நிலையில், தமிழக உயர் கல்வித்துறையின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு எதிராக உள்ளது. தேர்வை ரத்து செய்ய உயர் கல்வி துறை செயலாளருக்கு எந்த உரிமையும் அதிகாரமும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் ஆகியவற்றிற்கு மட்டுமே தேர்வை நடத்தவும், ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஏப்ரல் 27ஆம் தேதி யுஜிசி தேர்வுகள் தொடர்பாக விதிமுறைகளை புறக்கணிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டவிரோதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு செல்லும்: தமிழக அரசு திட்டவட்டம்

தனித் தேர்வர்களுக்கான தேர்வை அறிவித்துவிட்டு, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சியை அறிவிப்பது என்பது தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளதாக தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ள ராம்குமார் ஆதித்தன், கலை, அறிவியல், டிப்ளமோ, இன்ஜினியரிங், எம்.சி.ஏ. படிப்பவர்கள் மட்டுமே பலன் பெறுவதாகவும், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியோருக்கு பாகுபாடு காண்பிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரியர் தேர்வுகளை தள்ளி வைக்கவோ, தாமதப்படுத்தலாமே தவிர ரத்து செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள ராம்குமார், மாணவர்களின் எதிர்கால நலன் கருதாமல் ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், யுஜிசி வழிகாட்டுதளின் படி அரியர் தேர்வுகளை எழுத வேண்டுமென உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி