ஆப்நகரம்

பாலியல் மோசடி மன்னன் காசி வழக்கு: இப்போதைய நிலவரம் என்ன?

தமிழ்நாடு முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்ட பாலியல் மோசடி மன்னன் நாகர்கோயில் காசியை சி.பி.சி.ஐ.டி போலிசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

Samayam Tamil 11 Jun 2020, 3:51 pm
தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி பாலியல் தொடர்பு வைத்து அதனை வீடியோவாக எடுத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நாகர்கோவிலை சேர்ந்த காசியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Samayam Tamil நாகர்கோயில் காசி


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவன் காசி. தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களாக்கி தனது கட்டுமஸ்தான உடலை காட்டி மயக்கி பாலியல் வன்முறை செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளான். சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவனை கைது செய்தனர்.

ஆனாலும், நீதிமன்ற வாசலில் அமர்ந்துகொண்டு கைகளில் காதல் குறி காட்டிகொண்டிருந்தான் காசி. இதனைத் தொடர்ந்து தெலங்கானா போலிசார் நடத்தியதைப்போல, காசி மற்றும் அவன் குழுவினர் மீதும் என்கவுண்டர் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

மேலும் மோசடி, மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து காசி குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டான். இதனை அடுத்து காசி மீது மேலும் பல பெண்கள் புகார் அளித்தனர்.

இந்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க 5 தனிப்படைகள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், சில வாரமாகவே இந்த வழக்கு குறித்து ஏதும் பேசப்படாமல் இருந்த நிலையில், விசாரிக்க விசாரிக்க இந்த வழக்கு விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்றும், பல முக்கியப்புள்ளிகள் உடனிருக்கலாம் என்றும் சமூக வலைதளங்கள் பேசத் தொடங்கின.

இந்நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். முதல் கட்டமாக காசியை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணை தீவிரம் ஆனால் மேலும் பல விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி