ஆப்நகரம்

சென்னை கார் ஓட்டுநர் மதுரையில் பிணமாக மீட்பு!!

சென்னையில் காணாமல் போன கார் ஓட்டுநர் மதுரையில் சடலமாக மீட்கப்பட்டார்.

Samayam Tamil 17 Sep 2019, 6:10 pm
சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வி. நாகநாதன் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதியில் இருந்து காணாமல் போனார். இவரது உடல் சடலமாக மதுரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
Samayam Tamil hand


சென்னையைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் வி. நாகநாதன். இவர் அசோக் நகரில் இருக்கும் ஒரு கார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குற்றாலத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்றார். ஆன் லைனில் கார் புக் செய்துள்ளனர். இதையடுத்து சென்னையில் இருந்து இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டு செப்டம்பர் 5ஆம் தேதி குற்றாலத்திற்குசென்றார். குற்றாலத்தை 7ஆம் தேதி சென்றடைந்துள்ளார்.

இதையடுத்து 8ஆம் தேதி தனது கார் நிறுவன உரிமையாளரிடம் பேசி, அங்கிருந்து புறப்படுவதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இவரது கார் உரிமையாளர் இவரை 9ஆம் தேதி வரை அணுக முடியவில்லை. காரில் இருந்த ஜிபிஎஸ் கருவியும் வேலை செய்யவில்லை. ஆதலால் கார் எங்கிருக்கிறது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை-சென்னை நான்கு வழிப் பாதையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சடலம் ஒன்று இருப்பதாக மதுரை கொட்டாம்பட்டி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சடலம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சென்னையில் புகார் பதிவாகிருந்த நிலையில், நாகநாதன் குடும்பத்தினரை மதுரைக்கு அழைத்து சென்று காவல் துறையினர் சடலத்தைக் காட்டினர். அது காணாமல் போன நாகநாதனின் சடலம் என்பது தெரிய வந்தது.

காவல் துறையினர் சித்தம்பட்டி சுங்க சாவடியில் இருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்தபோது, கார் அந்த வழியே சென்று இருப்பது தெரிய வந்தது. அவரது தொலைபேசியும், மதுரை வரை இயங்கி வந்துள்ளது. அதன் பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. காரும் காணவில்லை.

காவல் துறையினர் கார் ஓட்டுனரின் மரணத்திற்கு என்ன காரணம் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகநாதனின் மனைவி மற்றும் மூன்று மகன்கள் ராமநாதபுரத்தில் இருக்கும் ஓடைக்கரையில் தங்கியுள்ளனர்.

உடல் ஆய்வுக்கூறு செய்ய கார் ஓட்டுநர் நாகநாதனின் உடல் அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும். இவரது மரணத்தை சந்தேக மரணம் என்று கோட்டாம்பட்டி காவல்துறை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

அடுத்த செய்தி