ஆப்நகரம்

மஞ்சக்கோரை பகுதியில் அரசு மணல் குவாரிக்கு ஆப்பு வைத்தது நீதிமன்றம்!!

திருச்சி குணசீலம் மஞ்சக்கோரை பகுதியில் அரசு மணல் குவாரி அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 8 May 2019, 4:13 pm
திருச்சி குணசீலம் மஞ்சக்கோரை பகுதியில் அரசு மணல் குவாரி அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil மஞ்சக்கோரை பகுதியில் அரசு மணல் குவாரிக்கு  ஆப்பு
மஞ்சக்கோரை பகுதியில் அரசு மணல் குவாரிக்கு ஆப்பு


திருச்சி முசிறியைச் சேர்ந்த சுப்பிரமணி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், ''காவேரி படுகையில் திருச்சி தாத்தையங்கார் பேட்டை பஞ்சாயத்து மற்றும் முசிறி பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் விவசாயம் வாழ்வாதாரமாக உள்ளது. விவசாயத்திற்கு காவிரி ஆற்று நீரையே நம்பி உள்ளனர்.

கோட்டூர், ஆம்பூர், கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 7000 ஏக்கர் விவசாய நிலங்கள் காவிரி ஆற்று நீரை நம்பியே உள்ளன. ஆனால் இந்தப் பகுதிகளில் நடந்து வரும் சட்டவிரோத மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்திற்கு சென்று விட்டது. அய்யம்பாளையம் முதல் குணசீலம் வரை சட்டவிரோத மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு அறிக்கையும் இதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் குணசீலம், மஞ்சக்கோரை பகுதியில் புதிதாக மணல் குவாரி அமைக்க அரசு முயற்சித்து வருகிறது. இங்கு மணல் குவாரி அமைந்தால் விவசாயம் பொய்த்து, மேலும் அபாய நிலைக்கு செல்லும். ஆகவே குணசீலம் மஞ்சக்கோரைப்பகுதியில் அமைக்கப்பட்டுவரும் அரசு மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி குணசீலம் மஞ்சக்கோரை பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க இடைக்கால தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர். இது அப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அடுத்த செய்தி