ஆப்நகரம்

ஜெயலலிதா சொத்துகள்: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஜெயலலிதா சொத்துகளை பராமரிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு மீது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

Samayam Tamil 27 May 2020, 5:30 pm
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதேபோல், ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த வழக்கில் மற்றொரு எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட வருமான வரித்துறையினர், ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.40 கோடி வருமான வரி பாக்கிக்காக அவர் வசித்த போயஸ் கார்டன் இல்லம், சில சொத்துகளை முடக்கி வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதனிடையே, ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது

இந்த வழக்கு தொடர்பான அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் திர்ப்பினை இன்று அளித்த சென்னை உயர் நீதிமன்றம், “ஜெயலலிதா போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்ததுடன், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது எனவும் கேள்வி எழுப்பியது. மேலும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விடுமுறை நாளிலும் ரேஷன் பொருள்களை வாங்க அரசு ஏற்பாடு!!

ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியை அறக்கட்டளையாக அமைக்க வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது உறவினர்களான தீபா, தீபக் ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தது. இது தொடர்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது.

அடுத்த செய்தி