ஆப்நகரம்

சென்னை-சேலம் பசுமைச்சாலை: விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவிடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளி விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Jun 2018, 10:09 am
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவிடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளி விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil cats
சென்னை-சேலம் பசுமைச்சாலை: விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!


சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மஞ்சவாடி பகுதியில் வருவாய்த்துறையினர் காவல்துறையின் பாதுகாப்புடன் நிலத்தை அளக்க சென்றனர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியும், விவசாயியுமான கார்த்திக் (35), தனது மனைவி பாலாமணி, தாயார் ஜோதி மற்றும் 2 குழந்தைகளுடன் நின்று கொண்டு, தனது நிலத்தை அளந்தால் குடும்பத்தோடு தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டினார்.

கார்த்திக் தனது கையில் மண்ணெண்ணை கேன் வைத்து இருந்ததால் அதிகாரிகள் பயந்து நிலத்தை அளக்கமால் இருந்தனர். இந்த நிலையில் திடீரென்று கார்த்திக்கும், அவரது மனைவியும் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறை ஊழியர்களும், போலீசாரும் அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இந்த நிலையில் தீக்குளிக்க முயன்ற விவசாயி, கார்த்திக் கூறுகையில், ”நான் சொந்தமாக கரும்பு தோட்டம் வைத்துள்ளேன். தோட்டத்திலேயே ரூ.15 லட்சத்துக்கு வீடு கட்டி உள்ளேன். இன்னும் கிரகப்பிரவேசம் கூட நடத்தவில்லை. அதற்குள் எனது வீடும் கரும்பு தோட்டமும் பசுமை வழி சாலைக்காக இடிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த தோட்டத்தை வைத்து தான் பிழைப்பு நடத்தி வந்தேன். இதுவும் போய்விட்டால் நான் என்ன செய்வேன்” என்று கண்கலங்க தெரிவித்தார்.

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நில அளவிடும் பணியை எதிர்த்து, சேலம் பகுதியில் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது தருமபுரி மாவட்ட மக்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

அடுத்த செய்தி