ஆப்நகரம்

சார் லீவு கொடுங்க; கொரோனா அறிகுறி இருக்கு - மிரண்டு போன ஆசிரியர் - அடுத்து நடந்த பரபரப்பு!

கொரோனா அறிகுறி இருப்பதால் தனக்கு விடுப்பு தருமாறு மாணவன் கடிதம் எழுதியதால் பள்ளி தலைமையாசிரியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2020, 12:34 pm
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரும் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை முகலிவாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பயின்று வரும் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil COrona in Chennai


அதாவது, தனக்கு கொரோனா வைரஸ் பாதித்த அறிகுறி இருப்பதாக ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது எளிதில் பரவக்கூடிய வைரஸ்.

எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருக்கின்றன. மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுத்துக் கொள்கிறேன். முன்னதாக சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அரசும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

என்னுடைய விடுப்பு நாட்களை வருகைப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். மேலும் இந்த கடிதத்தை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளான். இந்நிலையில் மாணவனின் கடிதம் வைரலாகி இருக்கிறது.

இப்படி கேட்டால் என்ன செய்வது? இத்தாலி விமான நிலையத்தில் தவிக்கும் தமிழக மாணவர்கள்!

இதையறிந்த பள்ளி நிர்வாகம் மாணவனின் பெற்றோரை அழைத்து பேசியது. அதில், மாணவன் விளையாட்டாக கடிதம் எழுதியது தெரியவந்தது. அந்த மாணவனுடன் படிக்கும் சக மாணவர்கள் இவ்வாறு கடிதம் எழுதுமாறு கூறியிருக்கின்றனர்.

இதைக் கேட்டு அந்த மாணவனும் கடிதம் எழுதியுள்ளான். இந்த சம்பவத்திற்கு மாணவனின் பெற்றோர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். அதேசமயம் மாணவனுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சான்றிதழ் சமர்பிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி