ஆப்நகரம்

முதல்வரின் தாயார் இறுதி சடங்கு: திரண்டு வந்த கூட்டம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் இறுதி சடங்கில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Samayam Tamil 13 Oct 2020, 10:31 am
எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் வசித்து வந்தார் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள். 93 வயதான இவர் வயோதிகம் காரணமாக கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
Samayam Tamil முதல்வரின் தாயார்


இதனால் நான்கு ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாலை மார்க்கமாக சிலுவம்பாளையத்திற்கு விரைந்தார். காலை 5.30 மணிக்கு தாயாரின் உடலுக்கு அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? புள்ளி விவரங்கள் தெரிவிப்பது இதுதான்!

அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், அன்பழகன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலரும் அதிகாலை முதலே அஞ்சலி செலுத்தினர்.

காலை 7.30 மணிக்கு இறுதி சடங்கு நிகழ்வு தொடங்கி நடைபெற்றது. 8 மணிக்கு தவுசாயம்மாளின் உடல் சிலுவம்பாளையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொது இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது தெரியுமா?

தொடர்ந்து சிலுவம்பாளையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பகல் 12 மணியளவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்திக் கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அடுத்த செய்தி