ஆப்நகரம்

சேகர்பாபு என்னையே வேலை வாங்குகிறார்.. முதல்வர் பேச்சால்கிசுகிசுத்த அமைச்சர்கள்

திருக்கோயில்கள் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் அமைச்சர் சேகர்பாபுவை குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமையாக பேசினார்.

Samayam Tamil 4 Dec 2022, 12:28 pm
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
Samayam Tamil sekar babu


அப்போது பேசிய முதல்வர், ''அமைச்சர் சேகர் பாபு ஒரு செயல்பாபு என்று ஏற்கெனவே நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அவரும் அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். கோபித்துக் கொள்ளக்கூடாது. ஒரு முதலமைச்சர்தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள். ஆனால் அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரை வேலை வாங்கக்கூடியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்படக்கூடிய வேலை.

இது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் இதுவரை இந்துசமய அறநிலையத்துறை மூலம் நடந்திருக்கும் சாதனை எங்காவது நடந்திருக்கிறதா என்று கேட்டால், தைரியமாக, தெம்பாக சொல்லலாம் தமிழ்நாட்டில் மட்டும்தான் செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை கம்பீரமாக சொல்லமுடியும்'' என இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பெருமையாக பேசினார்.

2022-2023ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், “ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவீனத்தைத் திருக்கோயில்களே ஏற்கும்“
என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்கள்தசார்பில் 31 இணைகளுக்கு இன்றுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, வாழ்த்தினார். இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இன்று நடந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச். அசன் மௌலானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி