ஆப்நகரம்

முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டம்; சிகிச்சை பெறும் தொகை ரூ.5 லட்சமாக உயர்வு!

சென்னை: மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சை பெறும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Nov 2018, 12:56 pm
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 11.1.2012ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
Samayam Tamil TN Govt


இது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 26.96 லட்சம் நபர்கள் ரூ.5,133.33 கோடி அளவிற்கு பயனடைந்துள்ளனர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை, மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அக்கோரிக்கையினை பரிசீலனை செய்து, ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 1.12.2018-லிருந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டு ஒன்றிற்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி