ஆப்நகரம்

கொரோனா நிதிக்காக கோயில் உபரி நிதி வேண்டாம்: அறநிலையத்துறை பல்டி

கோயில் உபரி நிதியை எடுத்து கொரோனா நிவாரணத்துக்குப் பயன்படுத்துவதற்கான சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுள்ளது இந்து சமய அறநிலையத் துறை.

Samayam Tamil 5 May 2020, 11:17 am
இந்து சமய அறநிலையத்துறியின் கீழ் செயல்படும் பெரிய கோயில்களில் உள்ள உபரி நிதியை, கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
Samayam Tamil Secretariat


பெரிய கோயில்களில் உள்ள உபரி நிதியை,கொரோனா நோய்த்தொற்று பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கான சுற்றறிக்கை சில தினங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. திரும்பப் பெறுவதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்தார்.

இதுகுறித்து, அவர் முதலில் வெளியிட்ட அறிக்கையில், “மிகப்பெரிய திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் வாடும் மக்களுக்கு உணவளிக்க திருக்கோயில் நிர்வாகத்தினர் தங்களால் இயன்ற நிதி உதவியை அளிக்க கோரப்பட்டிருந்தது.

இந்த நிதியானது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க உரிய அனுமதியை கோயில் அறங்காவலர் அல்லது தக்கார் தீர்மானத்துடன் உரிய படிவத்தில் முன்மொழிவுகளை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டது.

TASMAC: நிபந்தனைகளை மீறும் டாஸ்மாக்குகளுக்கு சீல் வைக்கப்படுமா?

இந்நிலையில், தற்போது, “நிர்வாகக் காரணங்களுக்காக இந்த சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது” என்று தனது உத்தரவில் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெரிய கோயில்களின் உபரி நிதியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட வேண்டுமென்ற சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணையின்போது, அறநிலையத் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படும் என நீதிபதியிடம் உறுதி அளிக்கப்பட்டது.

அளிக்கப்பட்ட அந்த உறுதியின் அடிப்படையில், அறநிலையத் துறை வெளியிட்டிருந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

கோயில்கள் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில், நிதிப் பயன்பாடு குறைவாகவே இருக்கும். அப்படியிருக்க உபரி நிதியை எடுத்து, கொரோனா போன்ற அவசரகாலச் சூழலில் பயன்படுத்தும் உத்தரவுக்கான சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுள்ளது இந்து சமய அறநிலையத்துறை.

அடுத்த செய்தி