ஆப்நகரம்

முதலீடுகளை ஈர்ப்பதென்றால், ஈர்ப்பது மட்டும்தானா.. ? - என்ன செய்கிறார் முதல்வர்

​உலக முதலீட்டாளர்களே வாருங்கள்..உங்களுக்காக தமிழகம் தயாராக இருக்கிறது என்று விளக்கி, சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

Samayam Tamil 26 Sep 2019, 1:07 pm
உலக முதலீட்டாளர்களே வாருங்கள்.. உங்களுக்காகத் தமிழகம் தயாராக இருக்கிறது என்று விளக்கி, சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
Samayam Tamil eps


இதற்கு முன், 2015 ஆம் ஆண்டிலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது. அதற்குப்பிறகு 2019 இல் தான் நடந்தது.

ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 3லடசத்து 431 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன்மூலம், 10லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது 2015ஆம் ஆண்டு கிடைத்த முதலீடுகளை விட பல்லாயிரங்கோடிகள் அதிகம் என்றும் பேசப்பட்டது..
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு, முதலீடு செய்த நிறுவனங்களின் ஆவணங்களை சரிபார்க்காததால், பலகோடிரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாகவும், 2019ஆம் ஆண்டு மாநாட்டில் பங்குபெறும் நிறுவங்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையிம்போது, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டின்படி தமிழகத்தில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் எத்தனை என்று கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து 3 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

முதலீடுகள் என்பவை தொழில்களாக மாறி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனை முதலீட்டை ஈர்த்த அமைப்பு பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் இன்று (26.09.2019) சுமார் 7,175 கோடி ரூபாய்க்கு 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுகிறார். இதன்மூலம் 45,836 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல, உலக முதலீட்டாளர் மாநாடு 2019இன் மூலம் தமிழகத்தில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார். ( நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தானே செய்வது போல )

ஜனவரி மாதம் சொல்லப்பட்ட, 3லட்சத்து 431 கோடி முதலீடு தெரிவிக்கப்பட்டதாகவே இருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. இப்படியிருக்க இப்போது கையெழுத்தாகும் 7175

தெளிவான தரவுகளைக்கூட, நீதிமன்றம் தலையீட்டுத்தான் வாங்கித்தரவேண்டியிருக்கிறது.. ஆனால், அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிக் கொண்டே இருக்கின்றன.

2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாநாட்டின் முடிவில் தெரிவிக்கப்பட்ட முதலீட்டில் வெறும் 25% மட்டுமே முதலீடானது என்று, குற்றச்சாட்டுகள் அப்போதே முன்வைக்கப்பட்டன.

அதேபோல, டாவோஸில் 2019ம் ஆண்டின் உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெற்று வந்த நேரத்தில், சர்வதேச முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்துதான் இந்த மாநாடே நடத்தப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், தற்போது நடப்பவை அந்த சந்தேகத்துக்கு மேலும் வலு சேர்ப்பவையாக உள்ளன..

நாடு நாடாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிறுவனக்களை சந்தித்து, முதலீடுகளைக் கொண்டு வர முயற்சி செய்கிறார் முதலமைச்சர். ஆனால், ஈர்த்த முதலீடுகள் எங்கே? என்று கேட்டால், அதுதாங்க இது என்பது போல, இன்னொரு இடத்தில் முதலீடு ஈர்க்க ஒப்பந்தம் போடுகிறார்.

முதலீடுகளை ஈர்க்க ஒரு முதல்வர் பல்வேறு முயற்சிகளை செய்வது பாராட்டத்தக்க விடயம்தான்.ஆனால், ஈர்ப்பதோடு மட்டும் நின்றுவிடுவதாக இல்லாமல், அறிவித்தபடி, கொண்டு வந்து தொழில் தொடங்கினால் நலம்.

அடுத்த செய்தி