ஆப்நகரம்

முக்கொம்பில் ரூ. 325 கோடி செலவில் புதிய கதவணைகள்: முதல்வர் பழனிசாமி

திருச்சி முக்கொம்பு மேலணையில் உடைந்த 9 மதகுகளுக்குப் பதிலாக 325 கோடி ரூபாய் செலவில் புதிய கதவணை கட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Aug 2018, 11:51 am
திருச்சி முக்கொம்பு மேலணையில் உடைந்த 9 மதகுகளுக்குப் பதிலாக 325 கோடி ரூபாய் செலவில் புதிய கதவணை கட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil edapadi-palanasami455-15-1494841933


கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூ் அணை நிரம்பியதை அடுத்து, அணைகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டது.குறிப்பாக முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியிலிருந்து 2.34 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு 67,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் முக்கொம்பு அணையில் 8 மதகுகள் திடீரென்று உடைந்து விழுந்தது. இதனால் அணையின் பெரும் பகுதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை மற்றொரு மதகும் இடிந்து விழுந்தது. மொத்தம் 9 மதகுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும், அணையின் 4 தூண்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் காமராஜ், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி பேசியதாவது: 'முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் இடிந்து விழுந்துள்ளது. இதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடையும். முக்கொம்பிற்கு வரும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு நீர் வெளியேறியதன் காரணமாகவே மதகுகள் உடைந்துள்ளன. மணல் குவாரிக்கும் மதகுகள் இடிந்து விழுந்ததிற்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், தற்போது வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது மாநிலத்தில் மணல் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணலுக்குப் பதிலாக எம் சாண்ட் (M-Sand) பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. புதிய கதவணை கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்'.

அடுத்த செய்தி