ஆப்நகரம்

நீரில் மூழ்கி மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்!

நீரில் மூழ்கி மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 22 Oct 2018, 12:13 pm
தஞ்சை காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் என 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
Samayam Tamil edapadi palanisamy


‘தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் கிராமத்தில் 19.10.2018 அன்று கபிஸ்தலம் கிராமம், சீதாலெட்சுமிபுரத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் செல்வன் மணிகண்டன், தியாகராஜன் என்பவரின் மகன் செல்வன் வெங்கடேஷ், ஆனந்த குமார் என்பவரின் மகன் செல்வன் விஷ்ணு பிரசாத், கருப்பையன் என்பவரின் மகன் செல்வன் ஸ்ரீநவீன், சாமிநாதன் என்பவரின் மகன் செல்வன் கதிரவன் மற்றும் பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் செல்வன் சிவபாலன் ஆகிய ஆறு மாணவர்கள் காவேரி ஆற்றில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் குளிக்கச் சென்ற போது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியையும்;

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எ.சாத்தனூர் மதுரா அஜிஸ்நகர் கிராமம், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அஜிஸ்நகர் பேருந்து நிறுத்தம் அருகே 19.10.2018 அன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த லாரியும் மோதியதில், எற்பட்ட தீ விபத்தில், பேருந்து ஓட்டுநர் அலெக்சாண்டர், பேருந்து கிளினர் சக்திவேல், விருதுநகரைச் சேர்ந்த பயணி மோனிஷா மற்றும் அடையாளம்
தெரியாத ஒரு நபர் என நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

நீரில் மூழ்கி உயரிழந்தவர்கள் மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி