ஆப்நகரம்

நெல்லை பாபநாசம், மணிமுத்தாறு அணையிலிருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்க உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணிக்கு 120 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 21 Jun 2018, 4:48 pm
நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரபரணிக்கு 120 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil cm palanisamy sad


இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளாவது:

‘திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தாமிரபரணி ஆற்றில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் ஆகிய ஏழு கால்வாய்களின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த் தேக்கங்களிலிருந்து தாமிரபரணி ஆற்றில் 24.6.2018 முதல் 21.10.2018 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குனேரி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 20729 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி