ஆப்நகரம்

பேரவை விதி எண் 110-ன் கீழ் சட்டமன்றத்தில் இன்றைய அறிவிப்புகள் - முதல்வர் பழனிசாமி!

தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் பற்றி இங்கு காணலாம்.

Samayam Tamil 16 Jul 2019, 10:22 pm
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த மாத இறுதியில் தொடங்கியது. தினமும் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கேள்வி நேரத்தின் போது, துறை சார்ந்த அமைச்சர்கள் உரிய விளக்கம் அளித்து வருகின்றனர்.
Samayam Tamil Palaniswami


இந்நிலையில் முதல்வர் பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

* மதுரை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பண்ணை அளவில் விளைபொருட்களை பாதுகாக்க சூரிய சக்தியால் இயங்கும் சிறிய குளிர்பதன அலகுகளை நிறுவிட தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.100 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் வசதி பெற்று தொழில் தொடங்க, மூலதன உதவி, கடன் உத்தரவாத திட்டம், வட்டி உதவித் திட்டம் போன்ற திட்டங்கள் நபார்டு வங்கியின் "நாப்கிசான்" நிதி நிறுவன உதவி உடன் செயல்படுத்த நடப்பாண்டில் ரூ.266 கோடி வரை கடன் உதவி

* ரூ.12 கோடி செலவில், 20 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்

* மானாவாரி விவசாயிகள் நலனுக்கு நடப்பாண்டில் மேலும் 150 மதிப்புக்கூட்டு மையங்களை உருவாக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 243 கிராம அளவிலான பண்ணை இயந்திர வாடகை மையங்கள் ரூ.19 கோடியே 44 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

* சென்னை வண்ணாரப்பேட்டையில், வேளாண் பொறியியல் துறைக்கு உரிய 5.5 ஏக்கர் நிலத்தில் ரூ.5 கோடி செலவில் நகரப்புற மக்களைக் கவரும் வகையில் "தோட்டக்கலை பாரம்பரிய பூங்கா" அமைக்கப்படும்.

* 100 விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய மையங்களை கட்டுவதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு, மிக நீள இழைப்பருத்தி ரக விதைகள், உயிர் உரங்கள், பருத்தி அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பழங்கள், காய்கறிகள் மற்றும் விரைவில் அழுகும் ஏனைய பொருட்களுக்கான "விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

அடுத்த செய்தி