ஆப்நகரம்

பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி பெண்ணின் வீடியோவை பரப்பினால் கடும் நடவடிக்கை

தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தொடர்பான வீடியோவை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்தார்.

Samayam Tamil 12 Mar 2019, 3:01 pm
தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தொடர்பான வீடியோவை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்தார்.
Samayam Tamil ராஜாமணி, கோவை மாவட்ட ஆட்சியர்


ஃபேஸ்புக் மூலம் பழக்கமாகும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த 4 பேரை கோவை மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக, குற்றம் சாட்டப்பவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியாளர் ராஜாமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் என்னிடம் புகார் வழங்கியுள்ளார். அதில், அரசியல் பின்னணி கொண்டவர்கள் தன்னையும், தனது குடும்பத்தாரையும் மிரட்டி வருகின்றனர் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளதாக ஆட்சியர் கூறினார்.

மேலும் பேசிய அவர், பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையின்றி பெண்ணின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தினாலோ, வழக்கை திசை திருப்பும் விதமாக செயல்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாரேனும் இருந்தாலும் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை காவல் துறை வெளியிடாது என்று ஆட்சியர் ராஜாமணி கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சார்ந்த தகவல்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பினாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அடுத்த செய்தி