ஆப்நகரம்

மோடியுடன் ஆலோசனை: முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று எட்டு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

Samayam Tamil 11 Aug 2020, 12:51 pm
கொரோனா தடுப்பு பணிகள், நிவாரணப் பணிகள், பொது முடக்கம் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று எட்டு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil pm cm meeting


சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார்.

நிலுவையில் உள்ள ஏப்ரல் - ஜுன் மாத ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜிஎஸ்டி வருவாய் குறைந்த காரணத்தால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதியாக 9000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்தார்.

எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்: அதிமுகவுக்குள் தொடங்கிய அடுத்த தர்மயுத்தம்!

கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நெல்கொள்முதல் செய்ய வேண்டி 1321 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1000 கோடி ரூபாய் அளிக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

சிறு, குறு நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக 1000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் ஆலோசனையின் போது முதல்வர் கோரிக்கையாக முன்வைத்தார்.

உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதியளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிசிஆர் சோதனைக்கான செலவின் 50 சதவீதத்தை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.

அப்பாடா, நிம்மதியடைந்த சென்னை: பதற்றமடையும் ஐதராபாத்!

நவம்பர் வரை ரேசன் கடைகளில் வழங்க 55, 637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

மேலும் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் 139 கொரோனா பரிசோதனை மையங்கள் இருப்பதாகவும் நாட்டிலேயே அதிக கொரோனா சோதனைகள் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது என்றும் முதல்வர் கூறினார்.

அடுத்த செய்தி