ஆப்நகரம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை!

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கூலி வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் இருக்கிறதா என மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

Samayam Tamil 18 Apr 2020, 8:19 pm
கொரோனா வைரஸ் கொள்ளை நோயை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நெல்லை மாநகராட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர்களுக்கும், அனுமதி அட்டை இல்லாமல் வெளியே வருவோர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Samayam Tamil புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை


இதன் ஒரு பகுதியாக, நெல்லையில் உள்ள தனியார் ஹோட்டல்கள், விடுதிகளில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு இன்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. மாநகரப் பகுதிகளில் வடமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள் தங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வடமாநில தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் யாருக்கும் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என அதிகாாிகள் தொிவித்துள்ளனர். திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உத்தரப் பிரதேசம், அசாம் உட்பட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வடமாநிலத் தொழிலாளர்கள் பேசுகையில், “நாங்கள் அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 24 பேர் கொண்ட குழுவாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். கொரோனா தொற்று அறிகுறிகள் தொடர்பாக இன்று எங்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. எங்களில் யாருக்கும் காய்ச்சல் இல்லை என சோதனையில் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி