ஆப்நகரம்

கொரோனா எதிரொலி: பாடத்திட்டம் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் வரும் கல்வியாண்டில் 50 சதவீதம் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

Samayam Tamil 29 Jun 2020, 5:26 pm
கொரோனா பெரும் தொற்று இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதையொட்டி கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பிரச்சினைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எனினும், கொரோனா பாதிப்பு காரணமாக விடுபட்ட நாட்களை ஈடுகட்டும் வகையில் வரும் கல்வியாண்டில் வேலை நாட்கள் அதிகரிக்கக்கூடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன், குறைவான நாட்களில் பாடத்திட்டங்களை எப்படி முடிப்பது என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஊரடங்கு நீட்டிப்பா? தமிழக அரசு என்ன முடிவு செய்துள்ளது? விரைவில் அறிவிப்பு!

இதையடுத்து, வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் மற்றும் வேலை நேரத்தை குறைக்க சிந்தித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான கருத்துகளை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் #SyllabusForStudents2020 என்ற ஹேஷ்டேக்கில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் ட்விட்டர், முகநூல் பக்கத்திலோ அல்லது தனது ட்விட்டர் பக்கத்திலோ பதிவிடலாம் எனவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வரும் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு சமூக அறிவியலில் இரண்டு பாடப்புத்தகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே பாடப்புத்தகம் அமலுக்கு வரும் எனவும், அதேபோல், 11, 12ஆம் வகுப்பிலும் அதிகமான பாட புத்தகங்கள் ஒரே புத்தகமாக மாற்றப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாட பகுதிகள் கணிசமாக குறைக்கப்படும் எனவும் தெரிகிறது.

அடுத்த செய்தி