ஆப்நகரம்

பெண்களுக்கு இப்படி பணியாற்ற தான் பிடிச்சிருக்காம்!!

நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள ஒர்க் ஃப்ரம் ஹோம் பணி நடைமுறையை தொடரவே, தனியார் நிறுவன பெண் பணியாளர்களில் பெரும்பாலும் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 18 May 2020, 11:52 pm
கொரோனா வைரசின் தாக்கமும், அதன் விளைவாக தொடர்ந்து அமலில் உள்ள பொதுமுடக்கம் தனிமனிதர்களின் அகம் மற்றும் புறம் சார்ந்த அன்றாட வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த தலைமுறை மட்டுமின்றி, உலக அளவில் மனித சமுதாயமே இதுவரை அனுபவிக்காத பல புது அனுபவங்களை பொதுமுடக்கம் நமக்கு தந்துள்ளது.
Samayam Tamil wfh4


குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையை (ஐ.டி.) சேர்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே இதுநாள்வரை பரிச்சயமான ஒர்க் ஃப்ரம் ஹோம் (வீட்டில் இருந்தப்படியே பணிபுரிவது) பணி முறையை பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்களும் அனுபவிக்கும் வாய்ப்பை பொதுமுடக்கம் அளித்துள்ளது.

வீட்டிலிருந்து தொடர்ந்து பணிபுரியும் நடைமுறைக்கு பணியாளர்கள் மத்தியில் ஆதரவும், அதிருப்தியும் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக, பெண் பணியாளர்களில் பெரும்பாலோர் ஒர்க் ஃப்ரம் ஹோம் பணி நடைமுறையை ஆதரிப்பதும், ஆண் பணியாளர்களில் பெரும்பாலோர் எதிர்ப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத பணியாளர் ஒருவர் கூறியது:

சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் காலை 8 மணிக்காவது பணிக்கு கிளம்பினால் தான், பேருந்து அல்லது ரயிலில் பயணித்து 9 -9:30 -க்குள் அலுவலகம் செல்ல இயலும். 8 மணிக்கு வீட்டைவிட்டு ஆபிசுக்கு புறப்பட வேண்டுமென்றால், விடியற்காலை 5 மணிக்கே எழுந்து, குடும்பத்தினருக்கு காலை உணவு, மதிய சாப்பாடு ஆகியவற்றை தயார் செய்ய வேண்டியுள்ளது.

அதன் பின்னர் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலோ, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சிக்னலில் சிக்கித் தவித்து ஆபிஸ் சென்றடைவதற்குள் தாங்கள் சோர்வடைந்து விடுவதாக, பெண் பணியாளர்களில் பெரும்பாலோர் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோன்று, பணிமுடித்து இரவு வீடு திரும்பியதும், இரவு உணவு அருந்திவிட்டு உறங்கினால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவதாகவும், இதனால், தங்களது பிள்ளைகளுக்கு முறையாக பள்ளிப்பாடம் கூட சொல்லிக் கொடுக்க முடியாத சூழல் நீடிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், தற்போது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடைமுறையில் உள்ள ஒர்க் ஃப்ரம் ஹோம் பணி முறையில், அலுவலகம் செல்வதற்காக அன்றாடம் 3 -4 மணிநேரம் பயணத்துக்கே செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் பயனாக, அலுவலக வேலை, அன்றாட வீட்டுப் பணிகள் ஆகிய இரண்டையும் தங்களால் முன்பைவிட சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது என்று பெண்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், வீட்டிலிருந்து பணிபுரியும்போது தங்களால், வழக்கமான அலுவலகப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. அலுவல் பணிச்சார்ந்து, சக ஊழியர்களுடன் நேரடியாக கலந்துரையாடவோ, விவாதிக்கவோ இயலவில்லை. இதனால், தங்களது பணியில் புதுமைகளை (Innovative) புகுத்த முடியவில்லை என்று ஆண் பணியாளர்களில் பெரும்பாலோர் தெரிவித்து வருகின்றனர்.

ஆண், பெண் பணியாளர்களின் பல்வேறு கருத்துக்கள் அடிப்படையில், ஒர்ம் ஃப்ரம் ஹோம் நடைமுறை தொடர்வது குறித்து தனியார் நிறுவனங்கள் விரைவில் முடிவெடுக்க உள்ளன என்று அந்த நபர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி