ஆப்நகரம்

நூறு நாள் வேலைத்திட்டம்: இதெல்லாம் நாங்க முடிவு செய்ய முடியாது - உயர் நீதிமன்றம்!

நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் எந்த மரங்களை நடவேண்டும், எந்த மரங்களை நடக்கூடாது என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 8 Jun 2022, 6:03 pm
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காக 2006ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த நூறு நாள் வேலை வழங்கும் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
Samayam Tamil நூறுநாள் வேலைத்திட்டம்
நூறுநாள் வேலைத்திட்டம்


மேலும், கிராம மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் நடும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

பல மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மற்றும் பல பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படும் பனை மரங்களை நடக் கோரி 2021ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி மத்திய - மாநில அரசுகளுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எந்த மரத்தை நட வேண்டும், நடக்கூடாது என நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும், இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என தெரிவித்தனர்.

கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை: தூக்கு ஆயுளாக குறைப்பு!
இதுபோன்ற கோரிக்கைகளில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பதால், இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டுமென நீதிபதிகள் கூறியதை அடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி