ஜல்லிக்கட்டு தடைபட்டதால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரலாறு காணாத போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்ற பின், இப்போது ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுவருகிறது. தற்போது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், தச்சன்குறிச்சி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு ஜனவரி மாத பொங்கல் திருவிழாவின்போது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று இடங்களில்தான் வருடா வருடம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெறும். இதனைக் காண வெளிநாட்டவர்கள்கூட தமிழகம் வருவர். அலங்காநல்லூரில் 15ம் தேதியும் பாலமேட்டில் 16ம் தேதியும் அவனியாபுரத்தில் 14ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார் செய்யும் வகையில், அவற்றிற்கு நீச்சல் பயிற்சி, ஓட்டம், மண்குவியலில் மண் குத்துதல், ஓட்டம், மாதிரி வாடி வாசல் அமைத்து திறந்துவிடுதல் போன்ற பயிற்சிகளை காளை வளர்ப்போர் பயிற்சி அளித்து வருகின்றனர்.