ஆப்நகரம்

திருநெல்வேலியில் உள்ள சொந்த கிராமத்தில் சரவணபவன் ராஜகோபாலுக்கு நாளை இறுதிச்சடங்கு

சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சரவணபவன் ராஜகோபால் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதன்பிறகுதான் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அவரது உடல் நெல்லை மாவட்டம், புன்னைநகரில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Samayam Tamil 18 Jul 2019, 6:26 pm
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று சென்னையில் காலமானார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 72. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால். இதனால் கடந்த வாரம் ஹைகோர்ட்டில் சரணடைந்தார்.
Samayam Tamil raja_630_630


ஏற்கனவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜகோபால், சரணடைய வரும்போதே ஆம்புலன்சில்தான் வந்தார். பிறகு கோர்ட் வளாகத்திலேயே உடம்பு இன்னும் முடியாமல் போனது.

இதன்காரணமாக சிறைக்கே போகாமல், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட சிரமமாக இருந்தால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அங்கு சிகிச்சை தரப்பட்டு வந்தது.

ஆனாலும் தொடர்ந்து உடல்நிலை மோசமாகி கொண்டே வந்தது. ஸ்டான்லி மருத்துவமனையில் அடிப்படை வசதி தவிர உயர்ந்த சிகிச்சை வசதிகள் இல்லை என்பதாலும், அதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி தர வேண்டும் என்று அவரது மகன் சரவணன் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அவரை இடமாற்றுவது சிக்கலானது என்று மருத்துவமனை அறிக்கை விடுத்த நிலையில், அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு உறுதி தந்தது. இதனை ஏற்ற கோர்ட்டும், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. அதனால் அண்ணாச்சியை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதித்தனர்.

ஐசியூவில் தீவிர சிகிச்சை பிரிவில், தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று காலை ராஜகோபால் உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவர் தண்டனை கைதி என்பதால் அவரது உடலானது சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

இதன்பிறகுதான் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அவரது உடல் நெல்லை மாவட்டம், புன்னைநகரில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை அங்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளும் அங்கு நடந்து வருகின்றன.

தான் இறந்த தினமே ஆனாலும், அன்றும்கூட அனைத்து சரவண பவன் ஓட்டல்களையும் திறந்தே வைக்க வேண்டும், மூடிவிடக்கூடாது என்ற அண்ணாச்சியின் கடைசி ஆசைப்படி ஓட்டல்களை ஊழியர்கள் கனத்த இதயத்துடன் திறந்தே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி