ஆப்நகரம்

CBSE: தலித் என்றால் தீண்டத்தாகாதவர்... எல்.முருகன் ஏற்றுக்கொள்வாரா?

சட்டப்புத்தகம் குற்றமென்று சொல்லும் ஒன்றை பாடப்புத்தகத்தின் வழி கற்றுத்தருகிறது மத்திய அரசின் பாடத்திட்டம்.

Samayam Tamil 20 Jul 2020, 10:59 pm
இந்தியாவில் கல்வியின் வாயிலாக, சாதிய ஒடுக்குமுறைக்கான ஆதரவு மனப்பான்மை வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. இதனை இல்லை இல்லை என்று ஒவ்வொரு முறையும் அரசு மறுத்து வந்தாலும் அடிக்கடி அதற்கான நிரூபணங்கள் தலைகாட்டுவது வாடிக்கையாக உள்ளது.
Samayam Tamil dalit discriminated in cbse syllabus netizens slams central govt
CBSE: தலித் என்றால் தீண்டத்தாகாதவர்... எல்.முருகன் ஏற்றுக்கொள்வாரா?


மத்திய பாடத்திட்டத்தில் தொடர்ந்து இதுபோல சர்ச்சைக்குள்ளாகும் விதமான கருத்துகள் இடம்பெற்றிருப்பது வாடிக்கையாகவே உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தலித் என்றால் யார் என்ற கேள்விக்கு தீண்டத்தகாதவர்கள் என்று விடையளிக்கும் விதமாக குழந்தைகளுக்கு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அந்த வினாத்தாள் பரவலாகி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.



அதன் பின்னர், மீண்டும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் ஒரு கேள்வி சர்ச்சைக்குள்ளானது. தலித்துகள் தங்கள் வீடுகளை எதைக் கொண்டு அமைப்பார்கள் என்ற அந்தக் கேள்விக்கு செங்கல், சிமெண்ட் பூச்சு, களிமண் என தெரிவுகளையும் (Options) கொடுத்தது அந்தக் கேள்வி.


தலித்துகளுக்கென்று தனி வீடுகட்டும் முறை என்று ஏதும் கிடையாது. ஆனால் மறைமுகமாக, மண்வீட்டில் வாழும் ஏழை எளியவர்கள் என்றால் தலித் என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கும் விதமாக அமைந்தது அந்தக் கேள்வி. அப்படி ஒரு வகைமையே தவறானது.

எந்த ஒரு நபரையோ, குழுவையோ சாதி, மத, இனத்தின் அடிப்படையில் ஒதுக்கவோ ஒடுக்கவோ கூடாது என்பது இந்திய அரசியலமைப்பின் உறுப்புகளில் ஒன்று. அதுபோக இந்தியாவில் தீண்டாமை என்பது சட்டப்பூர்வமாக குற்றமாகவும் விளங்குகிறது.

அப்படியிருக்க 4ஆம் வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகத்தில் தலித்துகள் என்றால் தீண்டத்தகாதவர்கள் என்று இடம்பெற்றுள்ளது இந்தியாவின் கல்வி முறையில் பெரும் அவலமாகவே பார்க்கப்படுகிறது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட இந்துக்கள் இதனை ஏற்றுக்கொள்கின்றனரா ஒரு கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக எல்.முருகனை நியமித்தபோது தமிழகத்தின் தலைவராக எல்.முருகன் என்னும் ஒரு தலித்தை நியமித்திருக்கிறோம் என்று பாஜக மார்தட்டியது. இந்நிலையில், மத்திய பாடத்தொகுப்பின் மூலம் பயிற்றுவிக்கப்படும் இந்த தவறான பாடத்துக்கு என்ன பதில் என்று கேள்விகள் எழும்பியுள்ளன.

தமிழ்நாடு அரசு தன் பாடநூலின் முதல்பக்கத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல், பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால், சட்டப்புத்தகம் குற்றமென்று சொல்லும் ஒன்றை பாடப்புத்தகத்தின் வழி கற்றுத்தருகிறது மத்திய அரசின் பாடத்திட்டம்.

அடுத்த செய்தி