ஆப்நகரம்

தருமபுரம் ஆதீன மடத்தில் இன்று இரவு பட்டினப் பிரவேசம்!

தருமபுரம் ஆதீன மடத்தில் இன்று இரவு முக்கிய நிகழ்வான பட்டினப் பிரவேசம் நடைபெறவுள்ளது

Samayam Tamil 22 May 2022, 8:25 am
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் 11ஆம் நாள் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டுக்கான விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருவான, கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா 10ஆம் நாளான நேற்று நடந்தது.
Samayam Tamil பட்டினப் பிரவேசம்
பட்டினப் பிரவேசம்


இந்த விழாவில் ஏற்கனவே ஆதீனங்களாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்வதற்கு தற்போது பீடத்தில் இருக்கும் ஆதீனம், நாற்காலி பல்லக்கில் அமர்ந்து குருமூர்த்தங்கள் எனப்படும் ஆதீனங்கள் நினைவிடங்களுக்கு சென்று வழிபாடு செய்வது ஆதீன மரபு ஆகும். அதன்படி, ஆதீனத்தில் உள்ள சொக்கநாதர் சந்நிதியில் ஆதீனகர்த்தர் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார்.

அதன்பிறகு, திருமடத்தில் இருந்து கட்டளைத் தம்பிரான்கள் புடைசூழ நாற்காலி பல்லக்கில் ஆதீனகர்த்தரை, மேலகுருமூர்த்தமான ஆனந்தபரவசர் பூங்காவில் அமைந்துள்ள முந்தைய ஆதீனகர்த்தர்களின் குருமூர்த்தங்களுக்கு சுமந்து சென்றனர். அங்கு சிறப்புவழிபாடு நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஆதீன மடத்தை வந்தடைந்தார்.
தேசியக் கல்விக் கொள்கையில் ஆட்சேபணை இல்லை: பொன்முடி தகவல்!
இந்த நிலையில், தருமபுரம் ஆதீன மடத்தில் இன்று இரவு முக்கிய நிகழ்வான பட்டினப் பிரவேசம் நடைபெறவுள்ளது. பட்டின பிரவேசத்திற்காக ஆதீன மடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதீனத்தின் சார்பில் அளிக்கப்படும் விண்ணப்பத்தை பரிசீலித்து பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் அது தமிழ்நாடு அரசால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதனை வைத்து பாஜக உள்ளிட்ட கட்சிகள், இந்து அமைப்புகள் அரசியல் செய்து வரும் நிலையில், தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி