ஆப்நகரம்

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடருமா? என்ன சொல்கிறார் கேப்டன் கப்பலின் நங்கூரம் பிரேமலதா!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடருமா என்பது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்

Samayam Tamil 27 Nov 2020, 9:45 pm
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தற்போதே களப்பணிகளை தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், முதல்வர் வேட்பாளர், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் அரங்கேறி வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி பரவலாக இருந்து வந்த நிலையில், அமித் ஷாவின் வருகை அதனை உறுதிபடுத்திச் சென்றுள்ளது. தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கிய தேமுதிகவுடன் இருந்த கட்சிகள் அனைத்தும் தற்போது திமுக கூட்டணியில் உள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக - பாஜக கூட்டணியில் ஐக்கியமான தேமுதிக, எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் அக்கூட்டணியில் தொடருமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் கொடுக்கப்படாததால் அதிமுக - பாஜக மேலிடம் மீது தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

நிவர் புயல்: இழப்பீடு தொகை அறிவிப்பு!

இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியை பார்வையிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேங்கியுள்ள தண்ணீரில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்னர், பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, செம்மஞ்சேரி பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது. ராட்சத பம்புகள் அமைத்து உடனடியாக தண்ணீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது, சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, இன்று வரை அதிமுக கூட்டனியில்தான் தேமுதிக உள்ளது. தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு ஜனவரியில் நடைபெற்ற பிறகு, சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்க பெரும்பாலானோர் வலியுறுத்தியதாகவும், ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைக்க கட்சியின் அதிகார மையம் விரும்பாத காரணத்தால் மக்கள் நலக் கூட்டணியுடன் அங்கம் வகித்து படுதோல்வியடைந்ததுடன் வாக்கு வங்கியும் கணிசமாக குறைந்து விட்டது என்று அந்த சமயத்தில் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தெரிவித்தனர். எனவே, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பெறப்படும் கருத்தின் அடிப்படையில் தேமுதிக முடிவு செய்யுமா அல்லது தன்னிச்சையாக முடிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அடுத்த செய்தி