ஆப்நகரம்

கேப்டனுக்கு என்ன தான் ஆச்சு; சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா பயணம்!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.

Samayam Tamil 19 Dec 2018, 2:57 am
தமிழ் திரையுலகில் முடிசூடா நாயகனாக திகழ்ந்த விஜயகாந்த், 2005ல் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2006, 2011ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல்கள் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தார்.
Samayam Tamil Vijayakanth


ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி படுதோல்வியை தழுவியது. அதன்பிறகு அரசியலில் விஜயகாந்திற்கு சறுக்கு முகமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் உடல்நலப் பிரச்சனையில் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். நீண்ட நாட்களாக விஜயகாந்த் குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை. அப்போது அமெரிக்காவில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு, தனது ரசிகர்களையும், தொண்டர்களையும் நிம்மதி அடையச் செய்தார்.

சிறுநீரகம், குரல்வளை ஆகியவற்றுக்காக தொடர் சிகிச்சைகள் எடுத்து வருகிறார். இதனால் தேமுதிக கட்சிப் பணிகளை பொருளாளர் பிரேமலதா கவனித்து வருகிறார். சமீபத்தில் தனது கட்சிக்கென தனி இணையதளத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.

இந்த சூழலில் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து விஜயகாந்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இடையே மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

அடுத்த செய்தி