ஆப்நகரம்

இலவசங்கள் வேண்டாம்: அரசுக்கு விஜயகாந்த அலர்ட்!

இலவசங்களால் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படும் என விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 5 Apr 2022, 2:17 pm
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு உள்ள ஜனரஞ்சகமான நலத்திட்டங்களால், இலங்கை, கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்று இங்கும் உருவாகலாம் என பிரதமர் நரேந்திர மோடி உடனான உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை செயலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
Samayam Tamil vijayakanth


இதே கருத்தை வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். “இன்றைய ஆட்சியாளர்கள் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, இலவசங்களை தருவதாக கூறுவது, தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வது போன்ற செயல்களால் மக்களை முட்டாளாக்குவது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.

வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேற்றமடைய செய்வதில் ஆட்சியாளர்கள் ஈடுபட வேண்டுமே தவிர, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி திணிப்பதோடு, தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலால் நாடு முன்னேறாமல் பொருளாதாரத்தில் மந்த நிலையை அடைய காரணமாகிறது.

அதிமுகவில் மூன்றாவது தலைமையை பிடிக்க போட்டி? எடப்பாடிக்கு புது சிக்கல்!

இலவச திட்டங்களால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பல லட்சம் கோடி கடனில் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஆறு லட்சம் கோடியாக உள்ளது. விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமே பொருளாதார சரிவுதான் என்பதால், இலவச திட்டங்களை தவிர்த்து, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சித்திரை திருநாளில் பால் காய்ச்சும் சசிகலா? எடப்பாடி தரப்பு ஷாக்!
அவ்வாறு செய்தால் மட்டுமே, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கான பணிகளில் தற்போது முதலே ஈடுபட வேண்டும். இல்லையென்றால் இலங்கையை போன்று நெருக்கடி நிலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி