ஆப்நகரம்

J Anbazhagan: சகோதரா! இனி எப்போது உன் பாசமுகம் காண்பேன்? - மு.க.ஸ்டாலின் உருக்கம்!

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 10 Jun 2020, 9:43 am
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தி இன்று காலை நேரத்திலா வர வேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர். சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது.
Samayam Tamil மு.க.ஸ்டாலின்


கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, திமுக முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்ற சிறிதும் ஓய்வின்றி களப் பணியாற்றியவர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட தனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார்!

இந்த சூழலில் சகோதரர் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று(ஜூன் 10) நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். கழக ரத்தம் பாய்ந்த உடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதி மிக்க துணிவு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம் கொண்டவர்.

மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர். மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார்.

பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் ஜெ.அன்பழகனை நான் எப்படி மறப்பேன்? என்னை நானே தேற்றிக் கொள்ள முடியாமல் தேம்பி அழும் நிலையில், சகோதரர் அன்பழகன் அவர்தம் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்?

இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்? ஜெ.அன்பழகனின் பொதுவாழ்வு, கழகப்பணி, தியாக உணர்வுக்குத் தலைவணங்கி, கண்ணீர் பெருக்குவதன்றி, வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பலியான முதல் எம்.எல்.ஏ!

கழகத்தின் தீரமிக்க உடன்பிறப்பு மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த அன்புச் சகோதரர் ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து, ஜெ.அன்பழகன் அவர்களின் தியாக வாழ்வைப் போற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி