ஆப்நகரம்

Jacto Geo Strike: அறவழிப் போராட்டத்தை தீவிரமாக்கும் தமிழக அரசு; கண்டிக்கும் ஸ்டாலின்!

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்ட விவகாரத்தில், தமிழக அரசை மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

Samayam Tamil 28 Jan 2019, 4:49 pm
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர் போராட்டத்தால் அரசின் பல்வேறு துறைகளும், பள்ளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை போராட்டக்காரர்களின் முழு கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil MK Stalin


அதில், ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் பற்றியோ, அறவழியில் போராடுவோரின் கோரிக்கைகள் பற்றியோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஆகியோர் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதி காத்து வருகின்றனர்.

அமைச்சர் ஜெயக்குமார் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முழுப் பக்க விளம்பரங்கள் கொடுத்து, போராட்ட உணர்வை மேலும் தூண்டிவிடுவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. அமைச்சர்களின் பொறுப்பற்ற செயல் மட்டுமின்றி, முதலமைச்சரின் பாராமுகம் இன்றைக்கு இந்த போராட்டத்தை இவ்வளவு தீவிரமாக்கியிருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது.

பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் தீர்வு தான் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற அடிப்படை உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டனத்திற்குரியது. போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுதான் இப்போது முக்கியமே தவிர அ.தி.மு.க அரசு மற்றும் அமைச்சர்களின் கவுரவம் அல்ல என்பதை மனதில் நிறுத்தி இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும்.

ஆகவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினைச் சேர்ந்தவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, போராட்டத்தினை சுமுகமான ஒரு முடிவிற்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி இனியும் கால தாமதம் இன்றி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த செய்தி