ஆப்நகரம்

தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

Samayam Tamil 30 Oct 2018, 6:19 pm
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், தேவர் ஜெயந்தி விழா குறித்து ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பது:
Samayam Tamil stalin devar


'இன்று (30-10-2018) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் நடைபெற்ற ‘தேவர் ஜெயந்தி’ விழாவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினேன். பிறந்த நாளும், இறந்த நாளும் ஒரே நாளில் இருப்பது வரலாற்றில் அதிசயம்.

அப்படி, அக்.30 பிறந்து, அக்.30ல் மறைந்த தேவர் திருமகனாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய அஞ்சலியை – மரியாதையை செலுத்துகிற அந்தப் பணியை தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

வங்கத்தில் எப்படி நேதாஜி புகழப்படுகிறாரோ அதுபோல், தமிழகத்தில் நம்முடைய தேவர் திருமகனார் புகழப்படுகிறார். தேசத் தொண்டு – தமிழ்த் தொண்டு – சமயத் தொண்டு – அரசியல் தொண்டு என எல்லாவற்றிலும் ஒரு சேர பயணித்து மக்களுக்காக குரல் கொடுத்த அவருக்கு, பசும்பொன்னில் நினைவிடத்தை அமைத்துத் தந்தவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.

அதேபோல், பசும்பொன் தேவர் அவர்கள் கைது செய்யப்பட்ட மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஏறக்குறைய 14 அடி உயரத்தில் சிலை அமைத்து அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களை அழைத்து சிலை திறப்பு நிகழ்ச்சியினை நடத்தியவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். மேலும், கமுதி, உசிலம்பட்டி, மேலநீலித நல்லூர் பகுதிகளில் தேவரின் பெயரால் கல்லூரிகள் உருவாக காரணமாக இருந்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

தேவர் வாழ்ந்த வீட்டை அரசு நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், முக்குலத்தோரில் குறிப்பிட்ட ஒரு பகுதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் தலைவர் கலைஞர். ஆகவே, அவரது வழியில், மதமாச்சர்யம் அற்ற - சாதி வேறுபாடு அற்ற சமூகத்தை உருவாக்க சபதமேற்போம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி