ஆப்நகரம்

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு பின் அவசர கூட்டம்! என்ன நடக்கிறது திமுகவில்?

ஆர்.எஸ்.பாரதி கைது குறித்து பேச நாளை கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 23 May 2020, 12:51 pm
ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் திடீரென அவரை கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று திமுகவினர் மட்டுமல்லாமல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கீ.விரமணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil mk stalin


இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சியிலுள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரிடம் நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ஆர்.எஸ்.பாரதி கைதை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்!

அதில், “கொரோனா கால ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப, குரோத எண்ணத்துடன் எடப்பாடி திரு. பழனிசாமி, ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார். எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கெல்லாம் தி.மு.கழகம் என்றைக்கும் அஞ்சாது" என்று கூறியுள்ளார்.



“முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது திரு. ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். எடப்பாடி திரு. பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நிகழ்ந்துள்ள “கொரோனா கால டெண்டர் ஊழல்” மீது விரிவான புகாரை - ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறார். “கொரோனா கால ஊழல்”, “கொரோனா தோல்வி” ஆகியவற்றை மூடிமறைக்க - குறிப்பாக முதலமைச்சர் என்ற நிலையில் தனது ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் “திசை திருப்ப” வேறு வழி தெரியாமல், குரோத எண்ணத்துடன், ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார் எடப்பாடி திரு. பழனிசாமி.

மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: என்ன செய்யப் போகிறது தமிழகம்?

“பட்டியலின - பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் - அவர்களின் சமத்துவ - சமூகநீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீர்மிகு பணிகளை, இதுபோன்ற “சிறுபிள்ளைத்தனமான”, அரைவேக்காட்டு, அதிகார துஷ்பிரயோகம் மூலம் - எடப்பாடி திரு.பழனிசாமியோ, அல்லது அவரை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் “ரிங் மாஸ்டர்களோ” களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பி விடவோ நிச்சயமாக முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். “அதிகாரம்” மற்றும் “அராஜகத்தின்” துணையோடு நடத்தப்படும் இதுபோன்ற “நள்ளிரவு கைது” நாடகங்களைப் பார்த்தெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம், மிரளாது; நடுங்காது. தமிழக மக்களும் அஞ்சமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி