ஆப்நகரம்

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனுவை திரும்ப பெற்றாா் என்.ஆா்.இளங்கோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த என்.ஆா்.இளங்கோ தனது மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார்.

Samayam Tamil 10 Jul 2019, 11:21 am
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் நான்காவது வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த என்.ஆா்.இளங்கோ தனது வேட்புமனுவை இன்று திரும்ப பெற்றுக் கொண்டார்.
Samayam Tamil NR Elango


தமிழகத்தில் வருகின்ற 18ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்கள் எம்.பி.க்களாக முடியும். அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், அதிமுக கூட்டணியில் பாமகவின் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதே போன்று திமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக கூட்டணியில் மதிமுகவின் வைகோ ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், வைகோ மீது தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது மனு நிராகரிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. இதனால் அவருக்கு மாற்று வேட்பாளராக திமுகவின் என்.ஆா்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்புமனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்ற நிலையில், வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து என்.ஆா்.இளங்கோ வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இளங்கோ தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார். என்.ஆா்.இளங்கோவும் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் வருகின்ற 18ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டிருக்கும். ஆனால், தற்போது ஆறு உறுப்பினர்கள் மட்டும் போட்டியிடுவதால், இவர்கள் அனைவரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வாக உள்ளனர்.

அடுத்த செய்தி