ஆப்நகரம்

அரைவேக்காடு அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது: எழிலரசன் காட்டம்!

அரைவேக்காடு அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது என்று திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் காட்டமாக விமர்சித்துள்ளார்

Samayam Tamil 29 May 2022, 9:34 am
தமிழ்நாட்டில் அரசு திட்டங்களை பிரதமர் மோடி சென்னையில் கடந்த 26ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கச்சத்தீவை மீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய நேரமிது. நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மேடையிலேயே வைத்தார்.
Samayam Tamil அண்ணாமலை, எழிலரசன்
அண்ணாமலை, எழிலரசன்


அத்துடன், மேடையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசிய போது, முதல்வர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டார். அப்போது, எழுந்த கரவோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. இதனை திமுகவினர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலினின் பேச்சை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு சான்று. பிரதமரை மேடையில் அமர வைத்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய பேச்சு ஒரு அரசியல் நாடகம் என்று அண்ணாமலை விமர்சித்தார்.

இந்த நிலையில், அரைவேக்காட்டு அண்ணாமலைக்கு பதில் சொல்ல முடியாது என்று திமுக மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வுமான எழிலரசன் காட்டமாக விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து சமயம் தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “அண்ணாமலை வேண்டுமானால் வெட்கப்படட்டும். பிரதமர் அவரை கேள்வி கேட்டிருப்பார். என்னை உட்கார வைத்துக் கொண்டே முதல்வர் ஸ்டாலினுக்கு கை தட்டுகிறார்கள்; என்னை உட்கார வைத்துக் கொண்டே திராவிட மாடல் என்றால் என்ன என்று சொல்கிறார்; இப்படி வந்து உட்கார வச்சுட்டீங்களேன்னு பிரதமர் அண்ணாமலையிடம் கேட்டுள்ளார். அந்த வெட்கத்தைத்தான் அவர் சொல்கிறார், பிரதமரை வைத்துக் கொண்டு முதல்வர் இப்படி பேசியது எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று. ஏனெனில் பிரதமர் அவரை அசிங்கமாக கேட்டு விட்டார். இதனால் அவருக்கு வெட்கமாகி விட்டது.” என்று காட்டமாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடக சிங்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு வந்து உட்கார வைத்தால் இப்படி பண்ணி விட்டீர்களே? வாட் இஸ் திஸ் என்று கேட்டு விட்டார் பிரதமர். பெருசா பில்டப்லாம் கொடுத்தீர்கள். எம்.கே.ஸ்டாலின் என்று சொன்னால் ஒட்டு மொத்த அரங்கும் அதிர்கிறது. இதனை பார்ப்பதற்காகவே என்னை கொண்டு வந்து உட்கார வைத்தீர்கள் என்று அண்ணாமலையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பிரதமரிடம் வெட்கப்பட்டுள்ளார். அந்த கோபத்தை அண்ணாமலை வெளியில் காட்டியுள்ளார்.” என்றும் எழிலரசன் தெரிவித்தார்.
வெங்கையா நாயுடுவுக்கு ஸ்டாலின் க்ரீன் சிக்னல்? இத நோட் பண்ணீங்களா!
மேலும், கருத்தியல் ரீதியான எதிர்க்கருத்துகளுக்கு நாங்கள் சரியான பதில்களை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். வெட்டித்தனமாக அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் திமுக மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வுமான எழிலரசன் காட்டமாக விமர்சித்தார்.

அடுத்த செய்தி