ஆப்நகரம்

திரும்பவும் சொல்றேன் மாணவர்களின் மருத்துவ படிப்பின் முழு செலவை திமுக ஏற்கும் - ஸ்டாலின்

ஏழை மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணத்தையும் தமிழக அரசு ஏற்கும் என்ற அறிவிப்பின் பின்னரும் கூட திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.

Samayam Tamil 27 Nov 2020, 3:56 pm
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை சுழல் நிதியிலிருந்து தமிழக அரசு நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.
Samayam Tamil முக ஸ்டாலின்


இதனிடையே, ஏழை, மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்திருந்தாலும், தனியார் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்ட முடியாமல் சில மாணவர்கள் மருத்துவப்படிப்பை கைவிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டார். அதற்கு, பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், திமுக, உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகம் என விமர்சித்தார்.

இந்த நிலையில், தற்போது ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பின் செலவை திமுக ஏற்க தயார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், '' நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் செய்யும் திறனற்ற அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டின் வழியாக ஒத்தடம் கொடுப்பதற்குப் பதில் உபத்திரவம் கொடுக்கிறார்கள்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுவதால் அவர்களால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த இயலாததால் கேட்டரிங் பணிகளுக்குச் சென்றுள்ளதாக 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் கே.பிரித்திஷா, கு.விஜயலட்சுமி, எஸ்.பவாணி ஆகியோரும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. இதுபோல மேலும் பல அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவே தகர்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆன்லைன் கந்துவட்டி ஆப்களுக்கு தடை வேண்டும்: கொதிக்கும் ராமதாஸ்

அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சரிசெய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? அரசு நினைத்தால் செய்ய முடியும்.

அப்படி இல்லாவிட்டால், மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித் தாருங்கள். முன்னர் அறிவித்தபடி தி.மு.கழகம் அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது'' என இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி