ஆப்நகரம்

கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைகிறாரா நடிகர் சரத்குமார்?

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் நடிகர் சரத்குமார் தனது கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 26 Jun 2020, 2:19 pm
நடிகரும், தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார், ஆரம்ப காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார். ஆனால், நாட்டாமை படத்துக்கு வந்த பிரச்சினையை தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக, மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்த ரஜினிகாந்துடன் கை கோர்த்தார்.
Samayam Tamil சரத்குமார்
சரத்குமார்


கடந்த 1996ஆம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்த சரத்குமார், திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். 1998ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனினும், 2001ஆம் ஆண்டு சர்தகுமாரை மாநிலங்களாவை உறுப்பினராக்கினார் கலைஞர் கருணாநிதி. 2006ஆம் ஆண்டு வரை திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, அதிமுகவில் தனது மனைவி ராதிகாவுடன் இணைந்தார். அந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரமும் செய்தார்.

ஆனால், கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுகவில் இருந்து ராதிகா வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து, திரைப்பட நடிகர் சங்க வேலைகளை காரணம் காட்டி சரத்குமாரும் அதிமுகவில் இருந்து வெளியேறினார்.

“போலீஸ் குடும்பத்துக்கு பால் கிடையாது” பால் முகவர்கள் திட்டவட்டம்!

அதனையடுத்து, 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நிறுவி அதன் தலைவராக உள்ளார். அப்துல் கலாம், காமாராஜ் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து இக்கட்சி செயல்படும் என்றும் அப்போது சரத்குமார் தெரிவித்திருந்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த சரத்குமார், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் வெற்றி பெற்றனர். அதன்பின்னர் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனது கட்சியை வளர்ப்பதே குறிக்கோள் என்று கூறி தனித்து இயங்கி வருகிறார்.

இந்த நிலையில், தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து விட்டு சரத்குமார் பாஜகவில் இணையவுள்ளதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி