ஆப்நகரம்

"நெருங்கும் க்ளைமேக்ஸ்".. அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீங்க.. சட்டென கூறிய எடப்பாடி.. ஷாக்கில் பாஜக!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றிய கேள்விக்கு காட்டமாக பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 16 Apr 2023, 12:57 pm
சேலம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய பதில்தான் இன்றைக்கு ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இதுவரை அண்ணாமலை பற்றிய கேள்விகளுக்கு நாசூக்காக பதில் சொல்லி நகர்ந்து வந்த எடப்பாடி பழனிசாமி இன்று மிக காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது அதிமுக - பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil annamalai edappadi


அதிமுக - பாஜக இடையேயான உறவு சமீபகாலமாக மிக மோசமான நிலையில் சென்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஏற்கனவே நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த இந்த மோதல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெளிப்படையாக தெரிந்தது. அந்த தேர்தலில் பாஜகவை அதிமுக பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இது பாஜக சீனியர்களை அதிருப்தி அடையச் செய்தது.

மேலும், பாஜகவில் இருந்து விலகிய ஐடி விங் நிர்மல் குமார் உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி புன்முறுவலுடன் அதிமுகவில் இணைத்துக் கொண்டது அண்ணாமலையை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றதாக தெரிகிறது.

வார்த்தையை விட்ட அண்ணாமலை

ஒருகட்டத்தில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் நான் ராஜினாமா செய்து கொள்வேன் என அண்ணாமலை கூறும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றது. இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறிவிட்டு, அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அத்துடன் அவர் நின்றிருக்கலாம். ஆனால், அதிமுகவை சீண்டும் விதமாக, தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை பேசினார்.

பொறுமை இழந்த அதிமுக

அண்ணாமலையின் இந்த பேச்சுதான் அதிமுகவினரை பொறுமை இழக்கச் செய்து இருக்கிறது. இதுவரை அண்ணாமலை விவகாரத்தில் பட்டும் படாமல் பேசி வந்த அதிமுக, தற்போது இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக ஜெயக்குமாரின் நேற்றைய பேட்டியிலேயே அந்த அனல் நன்றாக வெளிப்பட்டது.
"அண்ணாமலையை பொறுத்தவரை நான் சேலஞ்ச் கூட செய்கிறேன்.. அவர் அதிமுகவின் ஊழல் பட்டியல் என்று சொல்லட்டும்.. அதிமுக என சொல்லட்டும்.. அப்புறம் எங்கள் ரியாக்சனை பாருங்க.. இந்த மறைமுக மிரட்டல், பூச்சாண்டி எல்லாம் அதிமுகவிடம் நடக்காது.. இதுக்கெல்லாம் பயப்படுற ஆளுங்க நாங்க இல்ல.." என ஆவேசமாகவே பேசினார் ஜெயக்குமார்.

எடப்பாடி நேரடி அட்டாக்..

அதேபோல, அண்ணாமலையை அதிமுக எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக விமர்சித்தது. அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக சொத்துப் பட்டியல் ஒரு நகைச்சுவை காட்சி. இதில் அதிமுகவை சாரந்தவர்களின் பட்டியலையும் வெளியிடப் போறாராம். அவசரத்துல கைய விட்டா அண்டாக்குள்ள கூட கை போகாதுன்னு சொல்லுவாங்க.. அண்ணாமலை பதட்ட படாமல் அரசியல் பண்ண வேண்டும்" எனக் கூறி இருந்தார்.
இந்த பின்னணியில்தான், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக அண்ணாமலையை தாக்கி பேசியுள்ளார்.
"சொந்த காசில் வாழ்பவனே மானஸ்தன்".. யாரை சொல்கிறார் எஸ்.வி. சேகர்..? கொதிக்கும் பாஜகவினர்!
"பேசி பேசி பெரிய ஆள் ஆக்காதீங்க"..

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, "ஏன் அவை பற்றியே பேசிட்டு இருக்கீங்க.. இப்படி பேசி பேசிதான் அவர் பெரிய ஆள் ஆகுறாரு. நீங்க அவரை பற்றி பேசாதீங்க. நான் கிட்டத்தட்ட 50 வருஷமாக அரசியலில் இருக்கிறேன். என்ன நடக்குது ஏது நடக்குதுனு எனக்கு தெரியும்.
அவரு இப்படி பேட்டி கொடுத்தே பெரிய ஆள் ஆகணும்னு நினைக்கிறாரு. தயவுசெய்து அவர பத்தின கேள்விகளை என்னிடம் கேட்காதீங்க.. அரசியலில் இருப்பவர்களுக்கு அதன் அடிப்படை தன்மை தெரிய வேண்டும். முதிர்ந்த அரசியல்வாதிகளை பற்றி என்னிடம் கேளுங்க.. நான் பதில் சொல்கிறேன்" என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி