ஆப்நகரம்

மனைவி மீதா புகார் சொல்ற; நண்பனை மாட்டிவிட போய், வெடிகுண்டு புகாரில் தானே சிக்கிய சோகம்!

நண்பனுக்கு பாடம் புகட்ட நினைத்து, வெடிகுண்டு புகாரில் பொள்ளாச்சி நபர் தானே சிக்கிக் கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

TIMESOFINDIA.COM 28 Apr 2019, 5:44 pm
கோவை மாவட்டம் சுலீஸ்வரன்பட்டியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பேக்கரி நடத்தி வருபவர் ருக்மங்கதன்(53). அங்கு அடிக்கடி வந்து சென்றதன் மூலம், ருக்மங்கதனுடன் சிவராஜிற்கு(54) நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனது சிறுவயதில் இலங்கையில் வசித்துள்ளார்.
Samayam Tamil Pollachi Bomb Threat


14 வயதாகும் போது, தனது குடும்பத்தினர் இந்தியா திரும்பியதால் சுலீஸ்வரன்பட்டியில் செட்டில் ஆகியுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று, ருக்மங்கதன் வீட்டிற்கு சிவராஜ் சென்றுள்ளார். அங்கு ருக்மங்கதன் மனைவி ராஜலட்சுமியின் தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது ராஜலட்சுமி சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அன்றைய தினம் இரவு, சிவராஜ் மற்றும் ருக்மங்கதன் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ருக்மங்கதன் மனைவி குறித்து, அவரிடமே புகார் கூறியுள்ளார். அதாவது ராஜலட்சுமியின் நடவடிக்கை சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவு 12.45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ருக்மங்கதன் தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது சிவராஜ் உட்பட 3 இலங்கை அகதிகள் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக புகார் தெரிவித்தார்.

உடனே வெடிகுண்டு நிபுணர்கள் உடன் பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய போலீசார் ரயில் நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு காலை 5 மணி வரை தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் இல்லாததால், பொய்யான தகவல் என்பதை உறுதி செய்தனர்.

பின்னர் சைபர் கிரைம் உதவியுடன், ருக்மங்கதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். தன் மனைவி மீது அவதூறு தெரிவித்ததால், நண்பனை மாட்டி விட நினைத்து, தானே போலீசில் சிக்கிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடுத்த செய்தி