தென் கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடக்கிழக்குப் பருவமழை காரணமாக தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தென் கடலோர மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருந்து வருகிறது.
நேற்று மாலை முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் வீசிய புயல் காற்றில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அங்குள்ள பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
துண்டிக்கப்பட்ட மின்சாரம் மதியம் 2 மணிக்குமேல் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.