ஆப்நகரம்

களைக்கட்டிய ஈஸ்டர் பண்டிகை.. தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்.. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்!

ஈஸ்டர் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Samayam Tamil 9 Apr 2023, 11:01 am
சென்னை: இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றன.
Samayam Tamil easter celebration


கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக விளங்குவது ஈஸ்டர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்த நிலையில், அவர் மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த மூன்றாவது நாள்தான் உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈஸ்டர் பண்டிகையான இன்று, தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன. குறிப்பாக, நேற்று நள்ளிரவு அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலிகள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், நாகையில் பிரசித்தி பெற்ற புனித வேளாங்கண்ணி தேவாலயம், தூத்துக்குடியில் புனித பனிமய மாதா தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பல தேவாலயங்களில் இயேசு உயிர்த்தெழுதல் லேசர் விளக்குகளாலும், நாடகங்களாலும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன. பின்னர் 12 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் பட்டாசுகளை வெடித்தும், கேக்குகளை பரிமாறியும் இயேசு உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். சென்னை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் ஏராளமான வெளிநாட்டினரும் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

முன்னதாக, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர் தவக்காலம் மேற்கொண்டு வந்தனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர் அனுபவித்த சித்ரவதைகளை நினைவுகூரும் வகையில் இந்த தவக்காலம் அனுசரிக்கப்படும். இந்த நாட்களில் பெரும்பாலான கிறிஸ்தவர் இருவேளை மட்டுமே உணவு உட்கொள்வர். சிலர் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி முதல் தவக்காலம் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர், பெரிய வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அடுத்த செய்தி