ஆப்நகரம்

ஈரோட்டில் உடையும் சீக்ரெட்; 'நோ’ சொன்ன எடப்பாடி... 20 பர்சன்ட் டீலிங்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவிற்கு நோ சொல்லிவிட்டு எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே சில அரசியல் கணக்குகளை போட்டு வைத்துள்ளார்.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 27 Jan 2023, 12:13 pm
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை நிறுத்தும் பணியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நேற்றைய தினம் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து அறிவிப்பு வெளியானது.
Samayam Tamil edappadi k palaniswami master plan for erode east byelection against bjp and o panneerselvam
ஈரோட்டில் உடையும் சீக்ரெட்; 'நோ’ சொன்ன எடப்பாடி... 20 பர்சன்ட் டீலிங்!


எடப்பாடி உத்தரவு

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் வெற்றிக்கு தீவிரமாக உழைக்க வேண்டும். உடனடியாக பணிக்குழு உறுப்பினர்கள் ஈரோடு விரைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி தரப்பு வேட்பாளர் யார் என்பது இன்று (ஜனவரி 27) அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயம் குறித்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அதிமுக தரப்பை சந்தித்து பாஜக சார்பில் சில விஷயங்கள் பேசப்பட்டதாக தெரிகிறது.

சீட் கேட்ட பாஜக

முதலில் ஈரோடு கிழக்கு சீட்டை பாஜக தான் கேட்டுள்ளது. ஏனெனில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் நிலவும். ஒருவேளை சின்னம் முடக்கப்பட்டால் எங்களின் தாமரை சின்னம் மக்கள் மத்தியில் எடுபடும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 2.62 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். ஈரோடு மொடக்குறிச்சியில் ஒரு எம்.எல்.ஏவை பெற்றிருக்கிறோம்.


குலதெய்வ வழிபாடு... டிக் அடிக்கும் ஈபிஎஸ்; அடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

நோ சொன்ன ஈபிஎஸ்

கொங்கு மண்டலத்தில் ஓரளவு செல்வாக்கு உருவாகியுள்ளது. இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வருகிறது. எனவே எங்களுக்கு சீட் ஒதுக்கினால் ஒரு முன்னோட்டம் பார்ப்பது போல இருக்கும் எனக் கேட்டுள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி கறாராக ’நோ’ சொல்லி விட்டாராம். ஈரோடு என்பது கொங்கு மண்டலத்தில் முக்கியமான மாவட்டம். இங்குள்ள 8 தொகுதிகளில் 4ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

கொங்கு மண்டல செல்வாக்கு

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கொங்கு மண்டல வாக்கு வங்கி எங்களுக்கு சாதகமாக இருந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் உடன் மோதல் போக்கு நிலவினாலும் ஈரோடு எங்கள் கோட்டை. அங்கு எந்தவித சிக்கலும் கிடையாது. அதேசமயம் இதில் பெறும் வாக்குகளை வைத்து கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஈரோடு கிழக்கில் அதிமுக தான் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார

ரெண்டு திட்டங்கள்

அதுமட்டுமின்றி மேலும் இரண்டு விஷயங்களையும் எடப்பாடி தரப்பு யோசித்து வைத்துள்ளது. ஒன்று, சின்னம் முடங்கினால் அதன் பழியை ஓபிஎஸ் மீது போடுவது. கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று மக்கள் மன்றத்தில் போட்டு உடைக்கலாம். இரண்டாவது, பாஜக மட்டும் ஏதாவது ஒரு வகையில் ஒதுங்கி கொண்டால் ஏற்கனவே விட்டு போன 20 சதவீத சிறுபான்மையினர் வாக்குகள் மீண்டும் வந்து சேரும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரும் நிலையில் வாக்கு வங்கியின் பலம் கூடும் என திட்டமிட்டுள்ளனர்.


106 பேர் கொண்ட எடப்பாடி டீம்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தீயாய் இறங்கிய அதிமுக!

ஆதரவு யாருக்கு?

தற்போதைய சூழலில் எடப்பாடி தரப்பு போட்டியிடுவது உறுதியாகி விட்டது. தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என பாஜக தரப்பை கேட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஓபிஎஸ் தரப்பும் போட்டி போடுவதால், பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. அக்கட்சி அளிக்கும் ஆதரவு என்பது உண்மையான அதிமுக எது என்பதை அடையாளம் காட்டும் என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி