ஆப்நகரம்

சாத்தான் குளம் விவகாரம்: மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, உடல்நலக்குறைவால் மரணம் என்று மனசாட்சி இல்லாமல் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Samayam Tamil 1 Jul 2020, 9:08 am
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்குச் சென்ற தந்தை மகன் சர்ச்சைக்குரிய வகையில் மரணமடைந்த வழக்கு நாட்டையே உலுக்கியுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன. சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கையிலெடுக்க ஒரு வார காலம் ஆகும் என்ற நிலையில் சிபிசிஐடி தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
Samayam Tamil mk stalin


இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை உடனடியாக சி.பி.சி.ஐ.டி மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மாண்புமிகு நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு, கணவரையும் - மகனையும் இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி. இந்த வழக்கினை விசாரணை செய்ய சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குச் சென்ற நீதிபதியை, முதலமைச்சர் பழனிசாமியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மிரட்டியிருப்பது, பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை நினைவுபடுத்துகிறது.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, நம்பிக்கையளிக்கும் ரிப்போர்ட்!

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளரிடம் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் 29.6.2020 மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள அறிக்கை - ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்தக் கொடுமை என்றால், ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தியிருப்பார்கள்; எப்படியெல்லாம் விடிய விடிய லத்தியால் அடித்துத் துன்புறுத்தியிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நீதித்துறை நடுவர் தெரிவித்தவற்றை மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “மதுரை உயர்நீதிமன்ற கிளையின் மாண்புமிகு நீதியரசர்கள், நீதித்துறை நடுவர் விசாரணை செய்வதைத் தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துகிறது என்று தாங்களாகவே முன்வந்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது, போலிஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருத்த அவமானம்.

கூடுதல் டி.எஸ்.பி என்பவர் தூத்துக்குடி மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட அளவிலான அதிகாரி. அவர் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு எப்படிச் சென்றார்?

உயர்நீதிமன்றம் அனுப்பிய ஒரு நீதிபதியை ஒரு காவலர் தானாகவே மிரட்டினார் என்பதை எப்படி நம்புவது? மன உளைச்சல் இருந்தால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாமா?

இந்த மிரட்டல் - உருட்டல், ஆவணங்கள் தர மறுப்பு, காவல் நிலையத்தில் கொலைக்கான சாட்சியங்கள் அழிப்பு ஆகிய அனைத்தும் கூடுதல் டி.எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரளவில் முடிவு எடுத்து அரங்கேற்றப்பட்டவை என்பதை நம்ப முடியாது.

கொரோனா வைரஸ்: ஒரே மாதத்தில் 12 ஆயிரம் பேர் பலி - கட்டுக்குள் கொண்டு வர என்ன வழி?

உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்கும் ஒரு வழக்கில், துறை அமைச்சரான முதலமைச்சர் பழனிசாமிக்குத் தெரியாமல் இவை அனைத்தும் நடந்து விட்டன என்பதைத் துளியும் நம்ப முடியவில்லை!” என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “போலிஸ் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் தோல்வியடைந்த- காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை, உடல்நலக்குறைவால் மரணம் என்று மனசாட்சி இல்லாமல், உண்மையை வேண்டுமென்றே மறைத்த பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். எனவே, அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி