ஆப்நகரம்

அடிப்படை வசதிகளை ஒழுங்கா செஞ்சுதாங்க... அரசுப் பள்ளிகளின் தரம் தானா உயரும்: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அட்வைஸ்!!

ஒரு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையே செய்து கொடுக்காமல், பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என்று யார் சொன்னது என பெற்றோரை குறைக்கூற, யாருக்கும் உரிமையும் இல்லை என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆக்ரோஷமாக கூறினார்.

Samayam Tamil 5 Feb 2020, 8:17 am
நடப்பு கல்வியாண்டு (2019 -20) முதல் 5, 8 ஆம் வகுப்பு பயிலும் பிள்ளைகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
Samayam Tamil pem


கல்வித் தரத்தை மேம்படுத்தத்தான் இந்த நடவடிக்கை என்றும் மத்திய, மாநில அரசுகள் சமாதானமும் கூறி வந்தன. இதன்படி இருவகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது.

அரசின் இந்த நடவடிக்கை, பள்ளிச் செல்லும் பிஞ்சுகளுக்கு உளவியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இந்த பொதுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து விமர்சிக்கப்பட்டதுடன், மீம்ஸ்கள் போட்டும் கலாய்க்கப்பட்டது.


இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

அரசின் இந்த திடீர் மனமாற்றம் குறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "சமயம் தமிழுக்கு" அளித்த பிரத்யேக பேட்டி:

கேள்வி: 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து என்ற அரசின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: ஜனநாயக நாட்டில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டியது அரசின் கடமை.

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என அறிவித்து வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

அவர்களின் குரல்களுக்கெல்லாம் தமிழக அரசு தற்போத செவிசாய்த்திருக்கிறது. பல தரப்பினரின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாக இதனை பார்க்கிறேன். தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

கேள்வி:
பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை எல்லாம் வெளியிடப்பட்டுவிட்டதே?

பதில்: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் 14 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என சொல்லப்படவில்லை.

இந்த நிலையில், 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு சட்டத்துக்கு புறம்பானது என்பதை சுட்டிக்காட்டி, கல்வியாளர்கள் அரசுக்கு மனுக்கள் கொடுத்தனர். அவர்களின் கருத்தை அரசு அதிகாரிகள் கேட்டதாக தெரியவில்லை. குறைந்தபட்சம் அந்த மனுக்களுக்கு பதில் கூட அளிக்கப்படவில்லை. மாறாக, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என அரசாணை வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால்,இன்று மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களின் கூட்டத்தில் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கல்வியாளர்களின் கருத்தை கவனத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செயல்பட்டிருந்தால், தேர்வு அட்டவணை வெளியிடும் அளவுக்கெல்லாம் சென்றிருக்க வேண்டாம்.

கேள்வி: பொதுத் தேர்வை ரத்து செய்தாகிவிட்டது சரி... ஆனால், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த என்ன வழி?

பதில்: ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை வைத்துவிட்டால் கல்வியின் தரம் உயர்ந்துவிடுமா. நிச்சயம் உயராது. மாறாக, அது அவர்களுக்கு உளவியல்ரீதியான சிக்கலை தான் ஏற்படுத்தும்.

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை கவனிக்க ஆயாக்கள், அவர்களை பாதுகாக்க காவலர்கள் ஆகியோரை முதலில் அரசு நியமிக்க வேண்டும்.
பாடவாரியாக போதுமான ஆசிரியர்கள், விளையாட்டில் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க தேவையான உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில், ஒரு பள்ளி என்றால் என்னென்ன அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என அரசு சொல்கிறதோ, அவற்றையெல்லாம் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தினாலே போதும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளை தானாக அரசுப் பள்ளிகளில் சேர்ப்பார்கள். அரசுப் பள்ளிகளின் கல்வித் தரமும் தானாக உயரும்.

எந்த அடிப்படை வசதியையும் ஏற்படுத்தாமல், பெற்றோரை மட்டும் இந்த விஷயத்தில் அரசு உள்ளிட்ட யாரும் குறைக் கூறுவது நியாயமில்லை. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவும் அரசுப் பள்ளி தானே... அங்கு மட்டும் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டதானே செய்கிறார்கள் என பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.

அடுத்த செய்தி