ஆப்நகரம்

ரஜினிகாந்த் சிக்குவாரா? தண்டனை கிடைக்குமா?- எழும்பூர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Samayam Tamil 10 Mar 2020, 7:58 am
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது தனது கருத்துகளை கூறி சர்ச்சைகளுக்கு வித்திடுகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தி.க தலைவர் பெரியார் தலைமையில் 1971ஆம் ஆண்டு நடந்த பேரணியில் ராமர், சீதை உருவப்படங்கள் நிர்வாண நிலையில் எடுத்துச் செல்லப்பட்டன என்று கூறினார்.
Samayam Tamil Rajinikanth


இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்த ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இதுதொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் விதமாகவும் ரஜினிகாந்த் பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை எழும்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தவறான தகவலை தெரிவித்து இருபிரிவினரிடையே பகையை ஏற்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ரோஸ்லின் துரை விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கான்சியஸ் இளங்கோ, மத ரீதியாக அரசியல் செய்கின்றார். வெறுக்கத்தக்க கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார்.

அதிமுக கொடுத்த ‘ஷாக்’ - கூட்டணியை முறித்துக் கொள்கிறதா தேமுதிக?

இதுபோன்று சில தலைவர்கள் பேசியதால் தான் டெல்லியில் மிகப்பெரிய கலவரம் நடந்தது. தமிழகத்தில் அதுபோன்று பெரிய கலவரம் நடக்கவில்லை. இருப்பினும் செங்கல்பட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இந்து அமைப்பினர் ராமர் படத்தை தூக்கி வந்து போராட்டம் நடத்தினர். ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அவ்வாறு பேசும் நபர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தது போல ஆகிவிடும்.

உடனே ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி