ஆப்நகரம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று வெளியாகும் அறிவிப்பு - டெல்லி ஆடும் கேம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Authored bySM Prabu | Samayam Tamil 18 Jan 2023, 1:25 pm
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. எனவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil இபிஎஸ் ஓபிஎஸ்சுடன் மோடி
இபிஎஸ் ஓபிஎஸ்சுடன் மோடி


இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

இந்த மூன்று மாநில தேர்தல் தேதியுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதவில்லை. அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் களம் கண்டது. ஆனால், இடைத்தேர்தலில் வெயிட்டாக கவனிக்க வேண்டியதிருக்கும் என்பதால், இந்த முறை கூட்டணி கட்சிகள் கழண்டு கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஈரோடு கிழக்கில் திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளே நேரடியாக மோத அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் அந்த தொகுதியை கேட்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.

டெல்லிக்கு தண்ணி காட்ட ரெடியான எடப்பாடி: ஈரோடு மூலம் இரட்டை இலைக்கு வழி பிறக்குமா?
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை பொறுத்தவரை ஈரோடு கிழக்கை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குகிறதா அல்லது தாங்களே போட்டியிட போகின்றனரா என்பதுதான் கேள்வி.

ஆனால், அதிமுகவை பொறுத்தவரை ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒரு வேளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இரண்டு தரப்புமே இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரும். அவ்வாறு கோரும்பட்சத்தில் இரட்டை இலை முடக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், அக்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில், அவருக்கு பின்னால் பாஜக இருந்தது என்பது ஊரறியும். அந்த சமயத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, அதிமுகவின் அனைத்து அணிகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக உள்ளது. ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஓபிஎஸ் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஒருவேளை சின்னம் முடக்கப்பட்டால், அதன் பின்னணியில் டெல்லி இருக்கிறது என்பது உறுதியாகிவிடும். ஆனால், எடப்பாடி பழனிசாமியையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. எனவே, ஈரோடு கிழக்கை காரணம் காட்டி இரட்டை இலையை முடக்கி பாஜக தனது விளையாட்டை ஆரம்பிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி