ஆப்நகரம்

டிஜிபி ராஜேந்திரனை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் - உயர்நீதிமன்றம்!

தமிழக டிஜிபியாக செயல்பட்டு வரும் ராஜேந்திரனை மாற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 12 Mar 2019, 1:14 pm
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதேநாளில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
Samayam Tamil DGP Rajendran


இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கதிரேசன் என்பவர், தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் போது, டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அதில், டி.கே.ராஜேந்திரன் மீது குட்கா ஊழல் புகார் உள்ளது. தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே அவருக்கு பதிலாக நியாயமாக செயல்படும் அதிகாரியை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர், டிஜிபி விவகாரம் தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அதில், டிஜிபி ராஜேந்திரனை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி