ஆப்நகரம்

ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகள்

ஈரோட்டில் குளம் அமைக்க ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை விவசாயிகள் தானமாக வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 13 Jun 2018, 12:11 pm
ஈரோட்டில் குளம் அமைக்க ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை விவசாயிகள் தானமாக வழங்கியுள்ளனர்.
Samayam Tamil xerode-1528866225.jpg.pagespeed.ic.TcKLiW76gi


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிளாம்பாடி, பாம்பகவுண்டன்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இந்த கிராமங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. காவிரி ஆறு மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் இங்குள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வறட்சியால் நீர் பாசனம் இல்லாமல் விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இந்த பிரச்னைக்குத் முற்றுப்புள்ளி வைக்க அப்பகுதியில் புதிய குளம் வெட்ட, விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக 42 விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து 5 முதல் 30 சென்டு நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். இவ்வாறு மொத்தம் 1.7 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்.

நிலம் தயாராக உள்ள நிலையில், ‘ஒளிரும் ஈரோடு’ என்ற அமைப்பு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணியை செய்து தருகிறது. 10 அடி ஆழத்துடன் அமைய உள்ள இந்த குளத்தில் காலிங்கராயன் வாய்க்கால் பாசன கசிவுநீரையும் மழை வெள்ள நீரையும் சேமிக்க முடியும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

இதன் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசன வசதி கிடைப்பதுடன் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி