ஆப்நகரம்

அரசுப் பள்ளிக்கு சொத்தை தானம் செய்து தம்பியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய சகோதரி.!

ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தம்பியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அரசுப் பள்ளிக்குத் தானமாக வழங்கியுள்ளார்.

TNN 20 Nov 2017, 1:09 pm
ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தம்பியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அரசுப் பள்ளிக்குத் தானமாக வழங்கியுள்ளார்.
Samayam Tamil erode lady donate one crore for government school for his brothers last wish
அரசுப் பள்ளிக்கு சொத்தை தானம் செய்து தம்பியின் இறுதி ஆசையை நிறைவேற்றிய சகோதரி.!


நிறைவேறாத கனவு.!
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள அம்மாபாளையத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி நாச்சிமுத்து. இவருக்கும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். மகன் பெயர் நடராஜன். இவர் நீண்ட காலம் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். நடராஜனுக்கு நல்லபடியாக படித்து வேலைக்குச் செல்ல வேண்டுமென்பது ஆசை. உடல் நலக்குறைவு காரணமாக அவரின் இந்த ஆசை நிறைவேறவில்லை.

கடைசி ஆசை.!
நடராஜன் இறப்பதற்கு முன், 'என் சொத்தை அம்மாபாளையம் அரசுப் பள்ளிக்குத் தானமாக வழங்க வேண்டும், அதன் வழியாக ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்' என்று தந்தையிடம் வேண்டுகோள் விடுத்துவிட்டு இறந்து போனார்.

அரசுப்பள்ளிக்கு தானம்.!
மகனின் ஆசையை நிறைவேற்ற தந்தையும் ஆசைப்பட்டார். தொடர்ந்து, அம்மாபாளையத்தில் உள்ள 4 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை அரசுப்பள்ளிக்கு எழுதிவைத்த உயிலை மகள் ஈஸ்வரியிடம் நாச்சிமுத்து கொடுத்திருந்தார். இதன் மதிப்பு ஒரு கோடி ஆகும். தந்தை இறந்ததையடுத்து ஈஸ்வரி அந்த உயிலை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வழங்கியிருக்கிறார்.

இதுகுறித்து ஈஸ்வரி கூறுகையில், ''தம்பி நடராஜன் எம்.பி.ஏ மற்றும் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். படித்து முடித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டுமென்பதே அவரின் கனவாக இருந்தது. ஆனால், திடீரென்று தம்பியின் உடல் பாதிக்கப்பட்டது. இறக்கும்போது, தந்தையிடம் தன் இறுதி ஆசையைக் கூறியிருந்தார். தந்தை என்னை அழைத்து விஷயத்தைக் கூறி, 'தம்பியின் ஆசையை நிறைவேற்றட்டுமா' என்றுக் கேட்டார். நான் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. கடந்த 12-ம் தேதி தந்தை நாச்சிமுத்து இறந்துபோனார். இறுதிகாரியங்கள் முடிந்தபின் அந்த சொத்து பத்திரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் வழங்கியுள்ளேன். இனி அந்த நிலம் பள்ளிக்குச் சொந்தம். தம்பியின் இறுதி ஆசையை நிறைவேற்ற என் கணவர் அர்ச்சுனன், மகள்- மருமகன்கள் மறுப்போ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. என் தம்பியின் ஆசையை நிறைவேற்றி மனநிறைவு எனக்குள் நிரம்பியிருக்கிறது'' என்று கூறினார்.

சொத்துக்காக குடும்பமே பிரிந்து போகும் காலத்தில் தம்பியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அரசுப் பள்ளிக்குத் தானமாக வழங்கிய சம்பவம் ஈரோடு வாசிகளை நெகிழச் செய்துள்ளது.

அடுத்த செய்தி