ஆப்நகரம்

கொரோனாவால் இறந்தவரின் இறுதிச்சடங்குக்கு சென்றவரை அனுமதிக்க மறுக்கும் கிராமம்!

கொரோனாவால் இறந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவரை ஊருக்குள் அனுதிக்க மறுத்து ஏர்வாடி அருகே கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 17 Apr 2020, 1:41 pm
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த தொழிலதிபர் கடந்த 2ஆம் தேதியன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே 3ஆம் தேதியன்று அவரது உடல் கீழக்கரைக்கு எடுத்துவரப்பட்டு உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது. இதன்பின்னர், அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்ததாக சென்னை ஸ்டான்லி மருத்துவனை தகவல் வெளியிட்டது.
Samayam Tamil கொரோனாவால் இறந்தவரின் இறுதிச்சடங்குக்கு சென்றவரை அனுமதிக்க மறுக்கும் கிராமம்

அவருடைய இறுதி சடங்கில் பங்கேற்ற 150க்கும் மேற்பட்டவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் உத்தரவவிட்டிருந்தார். இதன்படி கீழக்கரையை சேர்ந்த செய்யது இப்ராஹிம் சாஹிப் என்பவரை மருத்துவக் குழுவினர் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ரத்த மாதிரி முடிவுகள் வருவதற்கு முன் அவர் ஏர்வாடி தர்ஹா பகுதியில் தங்கி இருந்ததால் அவரை அங்கேயே விட்டுச்செல்ல அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவக் குழுவினர் அழைத்து வந்தனர்.

இதனை அறிந்த ஏர்வாடி பொதுமக்கள் அவரை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் எனவும், ஏர்வாடி தர்ஹா பகுதிக்குள் அனுமதிக்கமாட்டோம் எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவரை ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் பகுதியில் இறக்கிவிட்டு செல்லும்போது ஏர்வாடி கிராம மக்கள் ஆம்புலன்ஸை வழிமறித்து அவரை அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஏர்வாடி காவல்துறையினர், வருவாய்த்துறையினர், மருத்துவக் குழுவினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி